- த. அஜந்தகுமார்
எனது நகரம்
என்னை
மிக வேகமாகக் கடந்து செல்கிறது
பிதுங்கி நிறைந்த பஸ்ஸை
மறிக்காது
கைகட்டி நிற்பவனாய்
நான்.
நகரத்தில் கைவிடப்பட்ட
குழந்தையாய்
கை சூப்பி
தெரு அளக்கிறேன்
எனது அறையும்
நானும்
தனித்திருக்கிறோம்
நேற்று என்னுடன் மிஞ்சியிருந்த
வண்ணத்துப்பூச்சியும்
சுவரில் மோதி செட்டைகள் பிய்ந்து
உருக்குலைந்து இறந்து போயிருந்தது
வண்ணத்துப்பூச்சியின் செட்டைகளை
பத்திரப்படுத்துகிறேன்
பல்லியின் வால் ஒன்றும்
தனியே இருந்தது
வீட்டுக்கூரையின் சிலாகையில்
சாரைப்பாம்பொன்று செட்டை கழட்டிவிட்டு
போயிருந்தது
என்னை நகரம் கடந்து சென்ற பின்னும்
புன்னகைத்தபடி இருக்கும் உதட்டிலும் முகத்திலும்
கடந்து போன வாகனங்களின் புகை
படிந்து போயிருக்கின்றது
இன்னும் எழுத முடியாமல்
மீதமிருக்கும்
கவிதைகளுடன்
எனது அறைக்கதவை
யாரும் திறக்காதபடி மூடிவிட்டு
எழுதிக் கொண்டிருக்கிறேன் எனது நகரத்தை!
No comments: