மூழ்கிவிட்டது
கடல்தாண்டிப் போகவுமில்லை
அடவி வழியே பதுங்கிய படி
நீள்தூரம் கடக்கவுமில்லை
நீரில் மூழ்கியவாறு தீ கரையேறிய நாளில்
நிலத்தில் பதுங்கிக் கொண்டு புயல்
முற்றவெளிக்கு வந்த நாளில்
ஆகாயத்தின் அருகுகளினூடாகப் புறப்பட்ட இடியோசைகள்
தலைக்கு மேலாக மையங் கொண்ட நாளில்
சூரியன் உன்மத்தங்கொண்டு
அலையத் தொடங்கியது
சூரியன் உருவாக்கிய நகரங்கள்
அஞ்சியபடி சிதறியோடத் தொடங்கின
அது வளர்த்த பயிர் நிலங்கள்
கருகத் தொடங்கின
ஆகாயமெங்கும் தீப்பிடித்த பொழுதில்
சூரியனின் பிரகாசம்
மெல்ல மெல்ல
வடியலாயிற்று
யாரும் சென்றடைய முடியாத ஏரியயான்றில்
கடைசியாக அது
மறைந்து கொண்டிருந்தது
நீர்ப்பரப்பில் உதிரத்தைக் கரைத்தபடி
சூரியன் செத்துப்போன நிலத்தை
ஊழியின் பெருமழை நனைத்தது
அது உருவாக்கிய பட்டினங்களில்
நிரந்தர இருள் படியலாயிற்று
சூரியன் மூழ்கிய ஆகாயம்
Reviewed by மறுபாதி
on
8:56 AM
Rating:
No comments: