$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

மனவூற்றின் நிகழ்வெளி

படைப்பு மனமும் கவிதையும்

கருணாகரன்

கவிதை என்பது என்ன என்று பலரும் எழுதியுள் ளனர். என்றாலும் இன்னும் கவிதையைக் குறித்த வியாக்கியானங்களும் விளக்கங்களும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. அவரவர் நோக்கு, அவரவர் தளங்கள், அவரவர் அனுபவம், அவரவர் சிந்தனை போன்ற காரணங்கள் கவிதையைக் குறித்த விளக் கங்களாவும்புரிதல்களாகவும் இருக்கின்றன. கவிதை குறித்த கேள்விகளாகவும் உள்ளன. என்றாலும் கவி தையைக் குறித்து இன்னும் தெளிவாக்க முடிய வில்லை.

சிலருக்கு கவிதை ஒரு மொழிசார்ந்த செயல்பாடு. வேறு சிலருக்கு அது உணர்வை மையமாகக் கொண்ட நுண்வெளிப்பாடு. அல்லது உணர் வுப் பரிமாற்ற வடிவம். வேறு சிலருக்கு அது அரசியல் செயல்பாட்டுக்கான கருவி. இன்னொரு சாராருக்கு, கவிதை எல்லாவற்றுக்குமான ஒரு மன இயக்கம். இப்படிப் பலவகையான அணு குதல்கள் கவிதை குறித்து உள்ளன. ஆகவே கவிதை குறித்த விவாதங்கள் முடிவடைவ தில்லை. அது முடிவடையப் போவதுமில்லை. அது ஒரு முடிவற்ற புதிராகவும் விநோதமாகவும் பேசப் பேச பேசக் கூடிய விசயமாகவும் இருக்கிறது.

படைப்பு என்பது எப்போதும் வினோதங்களையும் புதிரையும் அடிப்படையாகக் கொண்டது. அது எந்தப் படைப்பாக இருந்தாலும். இயற்கை ஒரு படைப்பு. இயற்கையின் விநோதங்கள் முடிவடைவதில்லை. அதன் புதிரும் தீர்வதில்லை. கணந்தோறும் அது புதிய புதிய அனுபவங் களையும் உணர்வு களையும் தந்து கொண்டேயிருக்கும். அதைப் போலவே கலையும் இலக் கியமும்.

கலையும் இலக்கியமும் படைப்புகள். மனிதனின் படைப்புகள். அனுபவத்தினதும் சிந் தனை, எண்ணம், உணர்வு, ஆற்றல் என்ற பல அம்சங்களின் கூட்டுவிளைவுகளினதும் வெளிப்பாடு. ஆகவே இந்தப் படைப்புகளின் புதிரும் விநோதமும் தீர்வதில்லை. புதிரும் விநோ தமும் எப்போதும் சுவை, சுவாரஸ்யம் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டவை. கலை இலக்கியப் படைப்புகளில் உள்ள சுவை, சுவாரஸ்யம் போன்றனவும் இந்த அடிப்படையிலான வையே.

ஆனால், இயற்கைப் படைப்பைப் பற்றி விமர்சனங்கள் இருப்பதில்லை. அவற்றைப் பற்றிய விசாரணையை விஞ்ஞானம் செய்கிறது. அந்த வகையும் துறையும் வேறு. ஆனால், விமர்ச னங்களை யாரும் செய்வதில்லை. அந்தப் படைப்பாளியை யாரும் சரியாக இனங்காணாததன் விளைவாக விமர்சனங்களை வைக்க முடியாதிருக்கலாம். இலக்கியம் கலை போன்றவற்றை மனிதர்கள் படைப்பதால் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. விவாதங்கள் நடத்தப்படு கின்றன. விளக்கங்கள் கோரப்படுகின்றன. மறுப்புகளும் கண்டனங்களும் கூட எழுப்பப்படு கின்றன.

ஆகவே, இந்தத் தொடர் விளக்கங்கள், விவாதங்களின்படி இன்னொரு பார்வையில் கவிதை என்பது அடிப்படையில் ஒரு சமூகப் பொருள் என்று நோக்கலாம். இது மனிதர்களால் படைக்கப்பட்ட சமூக பொருள். இயற்கைப் படைப்புக்கு இருக்கும் அத்தனை அழியா வியப்புக ளும் இந்தப் படைப்புக்கும் உண்டு. எல்லையற்ற வியாபிப்புகளில் இந்தப் படைப்பின் வியப்பு கள் இருக்கின்றன. இது ஒரு விரிவான விசயம். இதைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

இங்கே கவிதை என்ற படைப்பைப் பற்றி, அது தனிமனிதப் படைப்பாகவும் சமூகப் பொரு ளாகவும் இருப்பதைப் பற்றிப் பார்போம். கவிதையை ஒரு கவி, தன்னுடைய வெளிப்பாடாக-படைப்பாக முன்வைக்கிறார். ஆகையால் அது தனிமனித உற்பத்தியாகிறது. ஆனால், அந்தத் தனிமனித உற்பத்தியானது, சமூகத்தின் கூட்டு அனுபவத்திலிருந்து பெற்றதே. அல்லது கூட்டு அனுபவங்களின் வெளிப்பாடே. இந்தக் கூட்டு அனுபவம் சமகாலத்திலிருந்து கடந்த காலத்தின் ஆழம் வரை செல்கிறது.

அதாவது ஒரு கவி தன்னுடைய அனுபவங்களையும் உணர்வுகளையும் சமூகத்திட மிருந்தே பெற்றுக் கொள்கிறார். சமூகமும் காலமும் அவருக்கு இந்த அறிவைக் கொடுக்கின் றன. வேத காலங்களில் முனிவர்களுக்கும்கூட அவர்களுக்கு முந்திய தலைமுறைகளின் ஞானப் பரிமாற்றம் நடந்திருக்கிறது. அந்த ஞானப் பரிமாற்றம் என்பது முந்தைய தலைமுறை களின் கூட்டு அனுபவத் திரட்சியே. நாம் படிக்கின்ற கல்வி, நாம் பேசுகின்ற மொழி, நாம் பயன் படுத்துகின்ற பொருட்கள், நாம் வாழ்கின்ற வாழ்க்கை எல்லாமே எங்களுக்கு முதல் தலை முறைகள் உருவாக்கிய தளத்திலிருந்தும் பெறுமானங்களில் இருந்தும் கிடைத்தவையே. அல் லது அந்தச் சேகரிப்புகளில் இருந்து நாம் பெற்றவையே. ஆகவே அவை முந்தைய சமூகக் கூட்டுப் பெறுமானங்கள், வெளிப்பாடுகளே.

இதை நாம் இலக்கியத்தில் போர்க்காலம், அகதிக் காலம், பக்தி எழுச்சிக் காலம், இன வெழுச்சிக் காலம், ஜனநாயகத்துக்கான மறுமலர்ச்சிக் காலம், அடக்குமுறைக் காலம், விடுத லைப் போராட்ட காலம், நிலப் பிரபுத்துவ காலம், மன்னர் காலம் போன்ற எண்ணற்ற கால கட்டக் கவிதைப் போக்குகளில் இருந்தும் இலக்கியங்களில் இருந்தும் அறிய முடியும்.

அதேவேளை ஒரு படைப்பாளி தான் வாழும் சமூகத்திலிருந்தும் காலத்திலிருந்தும் தன் னுடைய கவிதைக்கான அனுபவத்தையும் உணர்வையும் பெற்றாலும், அவருடைய கவிதை என்பது அவருடைய கவிதையாகவே - தனித்து-தனித்துவமாகவே இருக்கிறது என்பதையும் அவதானிக்க வேண்டும். என்ன தான் பொதுத்தளங்களில் இருந்தும் கடந்த காலச் சேகரிப்பு களிலிருந்தும் அனுபவங்களையும் மொழியையும் அறிவையும் பிற ஏதுக்களையும் பெற்றா லும் ஒரு கவியினுடைய கவிதை எப்படியோ தனி அடையாளங்களை - தனித்துவ அம்சங் களைக் கொண்டிருக்கிறது. அந்தத் தனி அடையாளங்கள் எங்கிருந்து, எப்படிக் கிடைக்கின் றன?

இது ஒரு வியப்பான சங்கதியே. ஒவ்வொரு மனிதரும் தனி ஆட்கள், தனித் தனியான உறுப்புகள், தனித்தனியான பசி, துக்கம், மகிழ்ச்சி, வேட்கை, தாகம் போன்ற புலன் உணர்வு களையும் குளிர், வெப்பம் போன்ற உணர்கையையும் பெறக்கூடிய ஒழுங்கமைப்பைக் கொண் டவர்கள். ஆகவே இந்த வகையில் அவர்கள் தனியர்களே.

ஆனால், மனிதர்கள் என்ற அளவிலும் உறுப்புகளின் பொதுவான தொழிற்பாடு ஒன்றே என்ற அளவிலும் அவர்கள் பொதுவானவர்கள். பசி எல்லோருக்கும் பொதுவானது. ஆனால், அது தனித்தனியாகவே ஒவ்வொருவருக்கும் பசிக்கிறது. இப்படி எல்லாத் தனி அனுபவங்க ளுக்குள்ளும் தனி உணர்வுகளுக்குள்ளும் ஒரு பொதுவும் தனியும் கலந்திருக்கிறது.

ஆகவே பொதுவும் தனியும் கலந்த உலகம் இது. ஒவ்வொரு மனிதரும் தனித்தனி உலகங்களைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் பொது உலகத்திலும் சேர்ந்து

கொள்கின்றனர். ஒவ்வொருவரும் பொது உலகில் இருக் கும் அதேவேளை தனியர்களாகவும் உள்ளனர். நாம் எங்களுடைய வீட்டிலிருக்கிறோம். அதேவேளை வீதியில் இறங்கி எல்லோரு டனும் சேர்ந்தும் கொள்கிறோம். இதுபோல, ஒரு வகையில் இது வேடிக்கை தான். புதிரும்கூடத் தான். அதேவேளை இதுவொரு கணிதம், பிரபஞ்சக் குடும்பத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் தனித்தனிக் கோள்கள், கிரகங்களைப் போலவே.

ஆகையால் பொதுவும் தனியும் கலந்த உலகத்தில் அந்தந்த நிலைக் கேற்ப அவரவர் பாத்திரங்களும் மாறுபடுகின்றன. அவரவர் ஆற்றலுக்கேற்ப அவரவர் வெளிப்பாடுகளும் அமைகின்றன. இங்கே அனுபவமும் பயிற்சியும் கூட முக்கியமான பங்கை வகிக்கின்றன. படைப்பாக்க அனுபவத்துக்கு அப்பாலும் படைப்புக்குரிய உள்ளடக்கத்துக்கான வாழ்க்கை அனுபவம் - தரிசனம் என்பதும் படைப்பின் பெறுமானத்தை நிர்ணயிக்கிறது.

இங்கே பெறுமானம் என்பது தனியே படைப்பினுள்ளிருக்கும் பொருளை - கருத்தை மட்டும் குறிக்கவில்லை. பொருளுடன் அதற்குரிய வெளிப்பாட்டு முறை, அந்த வெளிப்பாட்டு முறை யில் இருக்கும் மொழி, வடிவம், கூறல் முறை போன்ற எண்ணற்ற அம்சங்களின் வழியாக அடையும் கலைப் பெறுமானத்தையுமாகும்.

இதன்படி என்னதான் இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த எல்லாக் கவிகளும் ஒரே மாதிரிக் கவிதையை எழுதவும் முடியாது, அணுகவும் முடியாது என்பது புரி யும். ஆனால், சிலகாலகட்ட நிகழ்ச்சிகள் வாழ்வை ஆழமாகப் பாதிக்கும்போது அந்தக் கூட்டு அனுபவம் கனதியாகிறது. அது அப்போது ஒத்த தன்மையுடையதாக, ஒரு கூட்டுணர்வை அடிப் படையாகக் கொண்டதாக அமைகிறது. இதற்கு ஏராளம் உதாரணங்கள் வரலாறு எங்கும் உண்டு. எங்களிடமும்-தமிழ்ச் சமூகத்திடமும்-உண்டு. சங்க காலக் கவிதைகள், பக்தி எழுச் சிக் காலக் கவிதைகள் என ஒரு பெரும் பாரம்பரியத்தை தமிழ்ச் சமூகத்திடமும் காணலாம். பின்னைய காலத்தில் ஈழத்தில் சாதியத்துக்கு எதிரான போராட்ட காலம், இனவிடுதலைப் போராட்ட காலம், பெண்களின் விழிப்புணர்வுக் காலம், அரச பயங்கரவாத காலம், போர்க் காலம், அகதிக் காலம், எதிர்ப்புக் கவிதைகளின் காலம் அல்லது எதிர்ப்பரசியலின் காலம் என்று இந்த அடையாளம் மிக நீண்டதாக இருக்கிறது. மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுதி இதற்கு ஒரு நல்ல அண்மைய உதாரணம்.

பொது-தனி என்றோ கூட்டு அனுபவத்தின் வெளிப்பாடு என்றோ அல்லது அதற்கப்பால் அவரவர் அனுபவங்கள், உணர்வுகளில் இருந்து தனியாக என்றோ, எப்படியாவது கவிதை யைப் பெற்றாலும் எந்தச் சமூகப் பொருளுக் கும்-படைப்புக்கும்-பல வகையான பரிமாணங்க ளும் அடிப்படைகளும் இருப்பதைப் போல கவிதைக்கும் பல பரிமாணங்களும் உண்டு. அடிப் படைப் பிரிதல்களும் உண்டு.

அதைப்போல தனிக்கூட்டு உணர்வுக் கவிதைகளிலும் இந்த வகைப் பரிமாணங்களும் பிரிதல்களும் இருக்கின்றன. தனிக்கூட்டு என்பது என்ன? காதல் ஒரு தனி உணர்வு. ஆனால், அந்தக் காதலின் அடுத்த கட்டம் என்பது தனியாக இருப்பதில்லை. அது பொதுவா கிறது. அது மற்றவருக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டு இணைவு என்று வரும்போது கூட்டாகிறது. அத்துடன் அது சமூக விளைவும் ஆகிறது.

காதலுக்கு சாதிய ரீதியான எதிர்ப்போ மத ரீதியான எதிர்ப்போ வர்க்க ரீதியான தடைகளோ அல்லது ஆதரவோ வரும்போது அது எத்தகைய தன்மையைப் பெறுகிறது? தனி என்ற வரை யறைகளைக் கடந்து அது சமூக நிலைக்கு வந்து விடுகிறது. எனவே அந்த எதிர்ப்பு நிலை அல் லது அங்கீகார நிலை என்பது சமூகஞ் சார்ந்தது. அது பொது வெளி சார்ந்ததாகவே அமை கிறது. இந்தப் பொது வெளியானது கூட்டின்-கூட்டு அம்சத்தின் விளைவே.

எனவே இந்தத் தனி உணர்வு தவிர்க்க முடியாமல் கூட்டு விளைவாகிறது. ஆகவேதான் இதைத் தனிக்கூட்டு என அழைக்க வேண்டியுள்ளது. மனிதர்கள் தனியனான கூட்டுப் பிராணி கள். அவர்கள் சமூகத்தின் ஒரு அங்கம் என்பதால் சமூகமாகவும் அந்தச் சமூகத்தின் ஒரு அலகாகவும் இருக்கிறார்கள்.

ஆகவே ஒன்று தனி உணர்வாகவும் இருக்கிறது. கூட்டு விளைவாகவும் இருக்கிறது. தனி உணர்வில் அது அடையும் வெளிப்பாடு, அது கவிதையாகும் போது பெறும் தனித்தன்மை என்பது ஒருவகை. அது தனி உணர்வு சார்ந்தது. அதேவேளை அது அடுத்த கட்டத்தில் கூட்டு விளைவாகும் போதும் சமூக விளைவாகும் போதும் அடைகின்ற வெளிப்பாடு இன்னொரு வகையாகிறது.

உதாரணமாக காதல் அன்பைத் தளமாகக் கொண்டது. பருவத்தின் வேட்கையையும் பால் உணர்வையும் பால் வேறுபாடுகளையும் உள்ளம்சங்களாகக் கொண்டது. எனவே அது தனி மனதில், தனி உணர்வில் உருவாகி, வெளிப்பாடடைகிறது. அப்போது அது தனிப் பண்பை அதிகமாகக் கொண்டிருக்கிறது.

காதற்பெருக்கு என்பது தனிப்பட்டது, தனியான உணர்ச்சி சார்ந்தது என்றபோதும் காதலை எதிர்கொள்கின்ற நிகழ்ச்சியானது சமூக நிலைப்பட்டது. அப்படிக் காதலை எதிர்கொள் ளும்போது அது - அந்தக் கவிதை சமூகக் கவிதையாகிறது.

கவிதைக்குரிய அடிப்படையும் சவாலும் இங்கேதான் உருவாகின்றது. தனி உணர்வையும் தனி அனுபவம், அறிவு, ஆற்றல், ஆளுமை, வெளிப்பாட்டுத் திறன், பயிற்சி, தேர்ச்சி போன்ற எண்ணற்ற அம்சங்களையும் சமூகத்தின் அறிவு, அதன் கூட்டு மனப்பதிவு என்பவற்றையும் எப்படி ஒரு கவி இணைத்து தன்னுடைய படைப்பை நிகழ்த்துகிறார் என்பதைப் பொறுத்தே ஒரு கவிதை அமைகிறது. படைக்கப்பட்ட கவிதையை எதிர்கொள்கின்ற வாசக மனத்தில் ஏராளம் அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. கவிதையை எதிர்கொள்ளும் போது அந்த அம்சங்கள் வாசக மனதில் மதிப்பீட்டுக் கருவிகளாகத் தொழிற்படுகின்றன. இதுவொரு கணினிப் பொறி முறை அமைப்புத்தான்.

எந்தப் படைப்பும் பல கலவைகளின் கூட்டே. எதுவும் எல்லாம். சேர்மானங் கள் இல்லாமல் ரசம்கூட வைக்க முடியாது. தனியானது எல்லாமே வெறுமையாகி விடுகின்றன. மணல் கூட பல கனிமங்களின் கூட்டுத்தான் அல்லது சேர்மானந்தான். ஆனாலும் அந்த மணலை நாம் வேறு சேர்மானங்களுக்குட்படுத்தாமல் விடும்போது அது மணலாக - பாலை வெளியாகவே மிஞ்சுகிறது. அந்தப் பாலை வெளியிலும் அழகிருக்கிறதே, அதற்கும் ஒரு உயிர்ப்புண்டே, அதற்கொரு அர்த்தம் இருக்கிறதே, அங்கும் வாழ்விருக்கிறதே என்று தோன்றலாம். உண்மை ஆனால் அதுவும் மணல்களின் சேர்மானங்களால் ஆன ஒரு வடிவமும் அடிப்படையுமே. அந்த மணற் துகள்களில் உள்ள சேர்மானங்களின் விளைவான விளைவே அது. ஆகவே படைப்பு எல்லாவற்றுக்கும் அடிப்படையாக கூட்டு, கலவை, சேர்மானம், இணைவு என்ற அம் சங்கள் அவசியமாகின்றன.

ஆகவே, தனி - கூட்டு என்ற இந்த அம்சங்களை வெற்றிகரமாகக் கையாண்டு சிறப்பாக தன் படைப்பைப் படைக்கும் ஒரு கலைஞர், அந்தப் படைப்பினூடாக நீடித்து விடுகிறார். படைப் புக்கு இருக்கும் சிறப்பும் நீட்சியும் படைப்பாளிக்கும் வந்து சேர்கிறது. எனவே எழுதப்படும் ஒவ் வொரு கவிதையும் அது எழுதப்படும் கணத்திலிருந்து அதற்கு முந்திய அத்தனை கணங் களையும் உள்ளடக்கி, அந்தக் கணங்களை வென்று தீரவேண்டும். அது வரையான கணங் களைக் கடக்க வேண்டும். இது வரையான நிறங்களிலிருந்தும் கோலங்களிலிருந்தும் சாயல்க ளில் இருந்தும் நீங்கி, அவற்றைவிடப் புதுமையுடையதாக, வேறொரு நிறப்பரிமாணங்களோடு இருக்கவேண்டும்.

மனமும் அத்தகைய புதிய நிறப் பிரிகைகளையே அவாவுகிறது. ஒவ்வொரு துளி வேட்கை யும் அவாவும் எண்ணற்ற சவால்களே. கவி எப்போதும் சவால்களின் முனையில் நிற்கும் ஒரு இயங்கியே.

மனவூற்றின் நிகழ்வெளி மனவூற்றின் நிகழ்வெளி Reviewed by மறுபாதி on 9:07 AM Rating: 5

No comments:

Powered by Blogger.