$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

காதல்

ந. பிச்சமூர்த்தி

மாந்தோப்பு வஸந்தத்தின் பட்டாடை உடுத்திருக்கிறது
மலர்கள் வாசம் கமழ்கிறது.
மரத்திலிருந்து ஆண்குயில் கத்துகிறது.
என்ன மதுரம்! என்ன துயரம்!
ஆண்குயில் சொல்லுகிறது:
காதற் கனல் பெருக்கெடுத்து விட்டது;
கரைகள் உடைந்து போயின;
நெஞ்சத்தின் வேர்கள் கருகுகின்றன.
குயிலி! காதல் நீரை வார்த்துத் தீயை அணைப்பாய்,
கருகிய வேர்களுக்கு உயிரை ஊட்டுவாய்
க்காவூ... க்காவூ...

அடுத்த கொல்லையில் எதிர்க்குரல்-
பெண்குயில் கூவுகிறது.
என்ன சோகம்! என்ன இனிமை!
பெண்குயில் சொல்லுகிறது;
தனிமை உயிரைத் தணலாக்கி விட்டது;
தணல் உன் குரலால் ஜ்வாலையாகிறது.
என் நெருப்பு உன் நெருப்பை அணைக்குமா?...
காதல் தீர்வதைவிட இக்கிளர்ச்சியே போதை.
இத்துன்பமே இன்பம்.
குயிலா! நெருப்பை வளர்ப்போம்.
க்காவூஉ... க்காவூஉ.

காதல் தெய்வம் காற்றொலியுடன் கலந்து சொல்லுகிறது;
ஒன்றுபட்டால் ஓய்வுண்டாகும், தேக்கமுண்டாகும்,
கலந்தால் கசப்பு உண்டாகும்;
காதற்குரல் கட்டிப்போகும்...

பிரிவினையின் இன்பம் இணையற்றது.
தெரியாமலா ஈசனும் இயற்கையும் ஓடிப்பிடிக்கிறார்கள்?
தெய்வ லீலையை உரக்கச் சொல்லு.
க்காவூ... க்காவூஉ...

1934 (மணிக்கொடி)
நன்றி - ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கவிதைகள்
காதல் காதல் Reviewed by மறுபாதி on 9:09 AM Rating: 5

No comments:

Powered by Blogger.