$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

தமயந்தி வடிவிலான கண்ணாடிக்குவளையில் எனது உலகை ஒரு புள்ளியாகக் காண்கிறேன்

மருதம் கேதீஸ்

உலகின் அதியற்புதமான

இறுதி உச்சக் கணங்களில் வாழ்ந்துகொண்டிருந்தேன்

தொனித்த வேடப் பிரபுக்களின் விரல் மொழிகளில்

நான் பெரும் மதிப்புக்குரியவனாக உணர்ந்தபோது

வார்த்தைகள் அம்மணமாக என்னை விட்டுச் சென்றன

கண்ணாடிக்குவளைக்குள் ஊறும் குமிழிகளில்

நாக்கினாலும் உதடுகளாலும்

பேசமுடியாச் சித்திரங்களை வரையத் தொடங்கினேன்

நான் வரைந்த சித்திரங்கள் என்னைத் தின்னத்தொடங்கியபோது

வெள்ளி நுரைகளாலான

முதல்தரக் கவிதைகளை கக்கிக்கொண்டிருந்தேன்

அவையின் அர்த்தங்கள் காகிதங்களில் குமிழியிட்டழிந்தன

தனக்கென ஒரு மொழியைக் கொண்டிராத உலகம்

பலகோடி வசைச் சொற்களோடு என்னைத் தழுவியபோது

ஊமையனாய்

செவிடனாய்

உணர்வில்லாதவனாய்

மலையளவு புழுதியைத் தின்றோ கடந்தோ

நெடுந்தூக்கத்திற்குச் சென்றுவிட்டேன்

மற்றொரு நாள்

எல்லாவற்றிலும் புலன்கள் நடுக்குற்று அலறுகின்றன

ஊனப்பட்டுத் தொங்கும் உடல்வழியே

தீயைக்கக்குகிற எரிச்சல் பாதை திறந்தபோது

நான் பள்ளத்தாக்குகளில் இறங்கியும் மலைகளில் ஏறியும்

அதற்கு அப்பாலும் சென்று

தமயந்தி வடிவிலான கண்ணாடிக்குவளையில்

எனது உலகை ஒரு புள்ளியாகக் காணத் தொடங்குகிறேன்

தமயந்தி கசப்பான மதுவையும் ஒரு முழு இரவையும்

என்னுடன் பகிர்ந்துவிட்டு களிப்பில் சிதறிக்கிடக்கிறாள்.

தமயந்தி வடிவிலான கண்ணாடிக்குவளையில் எனது உலகை ஒரு புள்ளியாகக் காண்கிறேன் தமயந்தி வடிவிலான கண்ணாடிக்குவளையில்  எனது உலகை ஒரு புள்ளியாகக் காண்கிறேன் Reviewed by மறுபாதி on 9:14 AM Rating: 5

No comments:

Powered by Blogger.